மகிந்தாவும் சர்வதேச நீதிமன்றமும்!!

இடுகையிட்டது தணல் Donnerstag, 11. März 2010

ஒரு நாட்டிலே பொதுத் தேர்தல் ஒன்று ஏற்படுமாயின், அந்த நாட்டில் புதிய புதிய திட்டங்களும், சுபீட்ச வாழ்வும், புரட்சிகர மாற்றங்களும் ஏற்படுவதற்கான முன் மணியோசையாக கொள்ளலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில், ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியும் எதிர்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியும் மாறி மாறி பழைய குப்பைகளை கிளறி சந்தியில் நின்று சண்டை பிடிப்பதே மரபாகும். தற்போது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல், கட்சிச் சண்டைகளுக்குள்ளும் தமிழ்மக்களுக்கான அடிப்படை மனித உரிமை மீறல்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளுவதை காணக் கூடியதாக உள்ளது. இராணுவ ரீதியாக புலிகளை அழித்த பின்னர் நாட்டில் பொருளாதார சுபீட்சம் ஏற்படுமென தென்னிலங்கை மக்கள் கனவுகள் கண்டிருந்தனர். மாறாக விலைவாசியேற்றம் இமய உச்சமாகி விட்டது. அத்தோடு தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்திருந்த அரச பயங்கரவாதம் தற்பொழுது மேலும் அதிகமாகி விட்டது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற வேண்டுமெனில் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப்பண்ண வேண்டுமென நெருக்குதல் கொடுப்பது ஒரு ஜனநாயக மீறல். இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது தங்களை முதலில் தமது சொந்த இடங்களில் குடியேற்றியபின்னர் தான் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப் பண்ணுவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். அது ஒரு வகையில் சிறப்பான கொள்கையாக அமையலாம். மீள்குடியேற்றமென்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதை அடகுவைக்குமளவு அரசுக்கு வறட்சியும், தமிழ்மக்களின் தெளிவின்மையையும் காட்டி நிற்கிறது. தமிழ்மக்களின் உரிமைகளுக்கு சார்பாக களமிறங்கும் அரசியல்வாதிகள் போட்டியரசியலை கைவிட்டு முதலில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும். இதுவே இன்று எம்முன் நிற்கும் பெரும் சவாலாகும்.

மக்கள் அரசியல் மயப்படுத்தப்படும் பொழுது எமது நாட்டின் தமிழ்மக்கள் சார்ந்த, கடந்த - நிகழ் - எதிர் கால அரசியல் சித்தாத்தங்களை விளங்கிக் கொள்ளும் பட்சத்தில், ஓர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத முகம் வெளியில் தெரிய அதிக வாய்ப்புகள் உண்டாகும் என்பதாகும்.

தற்போதைய தமிழ்க் கட்சிகளிடையிலான பிளவு தமிழ்மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், அரசியல் தெளிவையும் சீர்குலைத்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச அரங்கிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் எமது படித்த கனவான்கள் கொண்டுபோய் நிறுத்துவார்களென இனவாஞ்சை கொண்ட தமிழர்கள் கண்ட கனவு பலியாது போய்விடுமோ என்ற ஏக்கம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. பிரச்சனைகள் ஓரிடத்திலிருக்க, அதை நோக்கிய நகர்வுகள் வேறிடமாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே இதற்கான உடனடி தீர்வுக்கான பொறிமுறையை அனைத்து தமிழ்மக்களும் கண்டுபிடிக்க ஆயத்தமாக வேண்டும். வெறுமனே தேர்தலுக்குள் மூழ்கி, காலம் காலமாக நாம் போராடிவந்த போராட்டங்களுக்கு அர்த்தமில்லாமல் செய்துவிடலாகாது. வெளியில் நிற்பவர்கள் அனைவரையும் உள்வாங்கக்கூடிய ஒரு பொது அமைப்பை உருவாக்கும் பலம் புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடமே உள்ளது. தேர்தல் முடிந்த கையோடு வெற்றி தோல்விகளுக்கப்பால், மனக்கசப்புகள் மேலெழுவதற்கு முன், ஓர் புலம்பெயர் நாட்டிற்கு அனைவரையும் அழைத்து புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் பிரசன்னத்தில் உலகப்பயங்கரவாதிகளில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான ஒரு ஆரோக்கியமான திட்டமிடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது கட்டாய கடமையாகும்.

இதற்காக என்னவிலை கொடுத்தேனும், நேர்த்தியான, ஒற்றுமையான, ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பு புலம்பெயர் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக பிரதான எடுகோளாக மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதியாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்ட வேண்டும். இதுவே எமது தாயகத்து மக்களுக்கு நாம் புலம்பெயர்வாழ் மக்கள் செய்யும் பிராயச்சித்தமாகும்.


தசக்கிரீவன்

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Subscribe

Blog-Archiv